பெங்களூரு: அமைப்பு சாரா தொழிலாளர் வாரியத்திற்கு தரவேண்டிய 911 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் மற்றும் முதன்மை செயலாளர் ஆகியோருக்கு கர்நாடக மாநில ஐஎன்டியூசி தலைவர் எஸ்.எஸ். பிரகாசம் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக எஸ்.எஸ்.பிரகாசம் கூறியதாவது: மத்தியில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு தொழிலாளர்கள் நலனை புறந்தள்ளி வருகிறது. லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தனியாருக்கு தாரை வார்க்கப்படும் பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பின் போது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தொழிலாளர் நலவாரியம் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. அத்துடன் உணவு தானியம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நாங்கள் வினியோகம் செய்தோம்.
அதே நேரம் மத்திய தொழிலாளர் நலத்துறை 911 கோடி நிதியை தொழிலாளர் நலவாரியத்திற்கு உடனடியாக வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதை வலியுறுத்தி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளோம். பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கிறது. அதே நேரம் பிரதமர் நரேந்திரமோடி இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் தான்தோன்றி தனமாக நடந்து கொள்கிறார். நாட்டின் பிரதமராக நேரு பதவி வகித்த போது ஐந்தாண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்நாட்டில் தொழிற்துறை பெருகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜவினர் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கின்றனர்’’ என்றார்.