நெல்லை: சட்டமன்ற தேர்தலையொட்டி பாளையங்கோட்டை அரசு பாலிடெக்னிக் அருகே பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்ற மினி வேனை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.அதில் 4 பெட்டிகளில் ரூ.12 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தன. அந்த வாகனத்திலிருந்த மதுரையை சேர்ந்த மணி என்பவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மதுரை விமான நிலையத்திலிருந்து வந்த மொத்த நகைகளை கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், களியக்காவிளை, நாகர்கோவிலுள்ள நகைக்கடைகளுக்கு சப்ளை செய்ய கொண்டு செல்வதாகவும், இது மாதம் தோறும் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து அதற்குரிய ஆவணங்களை தேர்தல் பறக்கும் படை குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆவணங்கள் இருந்த போதிலும் அதிகளவிலான நகைகள் என்பதால் நெல்லை மாவட்ட வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் தேர்தல் அலுவலகத்திற்கு தங்க நகைகளை கொண்டு சென்று அதன் மதிப்பு, ஆவணங்கள், முறையாக வருமான வரிகள் கட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.