×

மோடி, அமித்ஷாவிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழகத்தை மீட்கும் வலிமை திமுகவுக்கு மட்டுமே உண்டு: திருமாவளவன் பேச்சு

பாபநாசம்: மோடியும், அமித்ஷாவிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழகத்தை மீட்கின்ற வலிமை திமுகவிற்கு மட்டுமே உண்டு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து கபிஸ்தலத்தில் நேற்று, வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேசியதாவது: அதிமுகவை வழி நடத்துகின்ற, கபளீகரம் செய்த பாஜக தமிழ்நாட்டை குறி வைத்துள்ளது. திமுக கூட்டணி தேர்தல் நேரத்தில் உருவான கூட்டணியல்ல.

பேரத்தில் உருவான கூட்டணியுமல்ல. பல்வேறு போராட்டங்களில் கை கோர்த்த கூட்டணி. பாஜகவை இயக்குவது ஆபத்தான கொள்கை கொண்ட ஆர்.எஸ்.எஸ். மோடியை இயக்குவதும் ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தின் அடிப்படை பிரச்னைகளை பற்றி பாஜக பேசியதே கிடையாது. விவசாயி நலன், விலைவாசி உயர்வு பற்றி பேசியதே இல்லை. பாஜகவிற்கு இந்து பாசம் மட்டுமே பொங்கி வழியும். வெறுப்பு அரசியலை விதைக்கின்ற கும்பல். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது தமிழகம் அமைதி காத்தது. இதற்கு பெரியார் அரசியல்தான் காரணம். இந்த மண்ணை பாதுகாத்தவர் கலைஞர். பெரியார் அரசியலை பாதுகாப்பது திமுக.

அதிமுக பாஜகவின் பினாமி கட்சி. பாமக பினாமி டீம். பாஜக நேரடியாக இங்கே வளர முடியாது. அதிமுக, பாமகவை பயன்படுத்துகின்றனர். இங்கு பாஜக போட்டியிடுவதாகதான் அர்த்தம். மோடியும், அமித்ஷாவும்தான் தமிழகத்தை ஆள்கின்றனர். பத்தாண்டு காலம் பட்டது போதும். எடப்பாடியும், ஓபிஎஸ்சும் வெற்றி பெறுவார்களா என்பதே கேள்விக்குறி. திமுக கூட்டணிக்கும், பாஜகவிற்கு எதிரான யுத்தம்தான் இந்தத் தேர்தல். அடமானம் வைக்கப்பட்ட தமிழகத்தை மீட்கின்ற வலிமை திமுகவிற்கு மட்டுமே உண்டு.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : DMK ,Tamil ,Nadu ,Modi ,Amit Shah ,Thirumavalavan , Thirumavalavan, speech
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...