×

ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், நேற்று ராயபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். வழியில் ஒரு கடையில் டிபன் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பிரசாரத்தை தொடங்கி, வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், ‘மீனவர்கள் நலனை கருத்திகொண்டு ரூ.100 கோடிக்கு மேல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு வசதி செய்து கொடுத்துள்ளேன். மீன் விற்பனை செய்பவர்கள் மழையிலும் வெயிலிலும் கஷ்டப்பட்டதால் சமீபத்தில் மீன்பிடி துறைமுகத்தில் சர்வதேச தரத்தில் மீன் மார்க்கெட் கட்டிக்கொடுத்துள்ளேன். தற்போது ரூ.155 கோடி செலவில் மீன்பிடி துறை முகத்தில் பல்வேறு வசதி செய்து கொடுப்பதற்கு மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

மீனவர் நலவாரியம் மூலம் கடந்த ஆண்டு ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் ரூ.1,000 வீதம் மூன்று முறை மொத்தம் ரூ.3,000 வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை 19,000 ரூபாயை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்னதாக வழங்க ஏற்பாடு செய்துள்ளேன். இப்படி பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்துள்ளேன்,’ என்றார். அவருடன், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

Tags : Minister ,Jayakumar ,Rayapuram , Minister Jayakumar campaigning in Rayapuram assembly constituency
× RELATED ராயபுரத்தில் 25 ஆண்டு முடிசூடா மன்னனாக...