இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்து கோயில் மீது அடையாளம் தெரியாத மர்மநபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள புரனா க்யூலா நகரில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்து கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த சனியன்று இரவு சுமார் 15 பேர் கொண்ட கும்பல் கோயில் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கோயிலின் பிரதான கதவு மற்றும் மற்றொரு கதவு சேதமடைந்துள்ளது. கோயில் முன்பாக பல ஆண்டாக சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தனர். சமீபத்தில் அந்த கடைகளை உள்ளாட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது. அதைத் தொடர்ந்து கோயில் சீரமைப்பு பணிகள் தொடங்கின. இதனால், கடைகள் அகற்றப்பட்டவர்களில் யாராவது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.