×

முதல்வரிடம் மனம் திறந்த மன்னிப்பை தெரிவித்து கொள்கிறேன்: திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா அறிக்கை

சென்னை: முதல்வரிடம் மனம் திறந்த மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா கூறியுள்ளார். திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா வெளியிட்ட அறிக்கை: இரண்டு நாட்களுக்கு முன்பு பெரம்பலூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முதல்வர் பழனிசாமியை பற்றி நான் பேசியது குறித்து சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும், பரப்பப்பட்டு வரும் செய்திகளுக்கு விளக்கமளித்தேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆளுமையையும், தமிழக முதல்வர் பழனிசாமியின் ஆளுமையையும் பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி, உவமானமாக தேர்தல் பரப்புரையில் நான் பேசிய சில வரிகளை மட்டும் எடுத்து, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்தரிக்கப்படுவதை விளக்கினேன். என்றாலும், அதுகுறித்து விவாதம் தொடர்ந்ததால் நேற்று கூடலூரில் நடந்த பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி குறித்தோ, அவரது அன்னையர் குறித்தோ புகழுக்கு களங்கம் விளைவிக்க நான் எண்ணியதில்லை என்றும், இரு தலைவர்கள் குறித்த அரசியல் ஆளுமைபற்றி நான் பேசினேன் என்றும், நானும் ஒரு தாயின் எட்டாவது பிள்ளை என்ற உணர்வோடு மீண்டும் விளக்கம் அளித்தேன்.

இதற்கு பிறகும், முதல்வர் எனது பேச்சால் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தி நாளிதழ்களில் படித்து மிகுந்த வேதனை அடைந்தேன். இடபொறுத்தமற்று சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக என் அடிமனதின் ஆழத்திலிருந்து எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் ஒருபடி மேலே போய் முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல், உள்ளப்படியே காயப்பட்டதாக உணர்வாரேயோனால் எனது மனம் திறந்த மன்னிப்பை தெரிவித்துக்கொள்வதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை.

முதல்வருக்கும், அவரது கட்சிக்காரர்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது, எனது பேச்சு இரண்டு தலைவர்களை பற்றிய தனிமனித விமர்சனம் இல்லை. பொதுவாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமை குறித்த மதிப்பீடும் மற்றும் ஒப்பீடும்தான். முதல்வர் பழனிசாமி காயப்பட்டு கலங்கியதற்காக எனது மனம் திறந்த மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,DMK ,Deputy General Secretary ,A.Rasa , DMK, A.Rasa, Report
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...