×

114 பேரை சுட்டுக் கொன்ற மியானமர் ராணுவத்தின் செயல் மனிதாபிமானமற்றது : அமெரிக்கா அதிபர் ஜோபிடன் கடும் கண்டனம்!!

யாங்கூன்: மியானமர் ராணுவத்தால் போராட்டக்காரர்கள் 114 பேர் ஒரே நாளில் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ஆட்சியை கடந்த பிப்ரவரி 1ம் தேதி புரட்சியின் மூலம் கவிழ்த்து விட்டு, ராணுவம் ஆட்சியை பிடித்தது. சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுதலை செய்யக் கோரியும், ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் மியான்மர் மக்கள் போராட்த்தில் நடத்தி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் மீது ராணுவம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இந்நிலையில், பத்துக்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் நகர்களில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த வழக்கம் போல் ராணுவத்தினரும், போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதில், 114 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதன்மூலம், போராட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 300க்கு மேல் சென்றுள்ளது. மியான்மர் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோபிடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெலாவேர் மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மியான்மர் ராணுவத்தின் செயல் முற்றிலும் மூர்க்கத்தனமானது. மிகவும் மோசமானது. மியான்மர் ராணுவத்தின் செயல் முற்றிலும் மனிதாபிமானமற்றது. எனக்கு கிடைத்த அறிக்கையின் அடிப்படையில், ஏராளமான மக்கள் முற்றிலும் தேவையில்லாமல் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

114 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா  உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 12 நாடுகளின் ராணுவ தலைவர்கள் இணைந்து மியான்மர் ராணுவத்துக்கு எதிராக கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதில், ‘மியான்மர் ராணுவம் சர்வதேச வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். ராணுவம் என்பது மக்களை பாதுகாப்பதற்கு தான். அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கு கிடையாது,’ என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க தூதர் தாமஸ் வஜ்டா கூறுகையில், “ஆயுதமில்லாத அப்பாவி மக்களை ராணுவம் கொன்றுகுவிக்கிறது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பும் ஐ.நா.சபையும் மியான்மர் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டை வன்முறையாக கண்டித்துள்ளன.

Tags : Myanmar ,United ,States ,Chancellor ,Zobidan , Myanmar, military, inhumane
× RELATED கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை