சென்னை: மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்தல் பணிக்காக சென்னை வந்த துணை ராணுவ வீரர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வடமாநிலங்களில் இருந்து துணை ராணுவப்படையினர் கடந்த மாதம் முதல் தமிழகத்துக்கு ரயில்கள் மூலம் வந்து கொண்டு இருக்கின்றனர். அதன்படி நேற்று மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு மத்திய ஆயுதப்படையினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்தனர்.
அப்போது ரயில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்ததும் ரயில் வந்த துணை ராணுவத்தினர் தங்களுடைய பொருட்களை ரயிலில் இருந்து கீேழ இறக்கி கொண்டு இருந்தனர். அப்போது அந்த ரயிலில் வந்த மத்திய ஆயுதப்படையை சேர்ந்த ராஜ்குமார் (50) என்பவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் மயங்கி கீழே விழுந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் உயிரிழந்தார்.