திருவொற்றியூர்: மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி நேற்று செங்குன்றம், நாரவாரிக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, மாதவரம் வி.மூர்த்தி பேசியதாவது, “அரசியல், ஜாதி, மதம் எந்த பாகுபாடும் இல்லாமல் ஏழை, எளிய மக்களுக்காக இந்த தொகுதியில் தரமான சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அனைத்து வசதிகளும் அதிமுக அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. நான் அமைச்சராக இருந்தபோது பகுதி பகுதியாக சென்று முதியோர், விதவைகள், உடல் ஊனமுற்றோருக்கு உதவித்தொகை கிடைக்க செய்துள்ளேன். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் நரிக்குறவர்கள் அனைவருக்கும் நிரந்தரமாக வீடு கட்டித்தரப்படும். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்,” என்றார். இதில் அதிமுக, பாஜ, பாமக போன்ற பல்வேறு கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.