திருவாரூர்: கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த ஆர்.காமராஜ் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார். திருவாரூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கே.கலைவாணனை ஆதரித்து மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. திருவாரூர் வாளவாய்க்கால் ரவுண்டானா அருகில் வேனில் பிரசாரம் செய்தார். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. மொழி, சமூகநீதிக்கு எதிரான ஆட்சி.
விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனியில் மத்திய அரசு அடகு வைத்தால் அதனை ஏற்றுக்கொள்ளுகின்ற ஆட்சி நடக்கிறது. தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்து பா.ஜனதாவின் பினாமி ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை தேர்தலின்போது முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள், கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். விவசாயிகளின் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும்.
நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டி நிலுவை தொகை பெற்று தரப்படும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். விவசாயத்திற்கு தனிபட்ஜெட் போடப்படும். திருவாரூரில் இசை கல்லூரி தொடங்கப்படும். தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான பொற்கால ஆட்சி அமைந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திட வேண்டும். நமது மாவட்ட செயலாளரும், வேட்பாளருமான பூண்டி கே.கலைவாணனை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.