×

காஞ்சிபுரம் அருகே சாலை விபத்து 15 ராணுவ வீரர்கள் படுகாயம்

காஞ்சிபுரம்: சென்னையில் இருந்து இன்று காலை ஆரணிக்கு ராணுவ வாகனம் மற்றும் அரசு பஸ்சில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் புறப்பட்டனர். சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலுச்செட்டி சத்திரம் பகுதியில் 8.30 மணிக்கு வந்துகொண்டிருந்தது. இந்த பகுதியில் நான்கு வழிப்பாதையை ஆறு வழி பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக கனரக இயந்திரங்கள் சாலை ஓரத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, ராணுவ வீரர்களை ஏற்றி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கனரக இயந்திரம் மீது மோதியது. இதில் 15க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

மீதமுள்ள வீரர்கள் லேசான காயத்துடன் தப்பினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அங்கு வந்த ஆம்புலன்சில் படுகாயமடைந்த ராணுவ வீரர்களை ஏற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் பாலுச்செட்டிசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துகுறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் படுகாயமடைந்த  சம்பவம் காஞ்சிபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Kanchepura , Kanchipuram, accident, soldiers, wounded
× RELATED சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,...