×

மேட்டுப்பாளையத்தில் 48 நாட்கள் நடந்த யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு: பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்ற யானைகள்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் கடந்த 48 நாட்கள் நடந்த கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, முகாமில் பங்கேற்ற 25 யானைகளும் தங்களின் இருப்பிடங்களுக்கு புறப்பட்டு சென்றன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த மாதம் 8ம் தேதி தமிழக கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகளுக்கான புத்துணர்வு முகாம் துவங்கி நடைபெற்று வந்தது. முகாம் துவங்கி ஒரு வாரத்தில்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமாலியதா என்ற யானையை பாகன் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளி வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்த யானையின் பாகன் ராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், ஜெயமாலியதாவை பராமரிக்க பாகன்கள் இல்லாத நிலையில் அது  மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டது. இதனால், 25 யானைகளுடன் முகாம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கவே யானைகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.  முகாமை 30 நாட்களுக்குள் முடித்துக்கொள்ள மருத்துவ குழு அறிவுறுத்தியும் தொடர்ந்து 48 நாட்கள் நடந்த பிறகுதான் முகாம் இறுதி செய்யப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர். நேற்றுடன் 48 நாட்கள் முடிவடைந்த காரணத்தினால் புத்துணர்வு முகாம் நேற்று மாலையுடன் முகாம் முடிந்தது. இதையடுத்து, கோவில் யானைகள் அனைத்தும் லாரிகள் மூலம் அதன் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முகாமில், யானைகள் ஒன்றோடு ஒன்று தழுவிக்கொண்டு பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 48 நாட்கள் நடந்த முகாமிற்கு செலவான தொகை சுமார். ரூ.1.67 கோடி.

Tags : Elephant Refreshment ,Camp ,Mettupalayam , At Mettupalayam, 48 days, Elephants, Refreshment Camp, Completed
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு