×

திருச்செங்கோடு அருகே மினி வேனில் அதிமுகவினர் கொண்டு வந்த 5 ஆயிரம் சேலைகள் பறிமுதல்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே, அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வழங்க சரக்கு வேனில் கொண்டு வந்து பதுக்கிய சுமார் 5 ஆயிரம் சேலைகளை, பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றியம் பள்ளக்குழி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செல்வகுமார்(49). ரிக் தொழில் செய்து வருகிறார். நேற்று மதியம் 12 மணியளவில், இவரது தோட்டத்து வீட்டிற்கு மினி சரக்கு வேனில் சேலைகள் அடங்கிய பண்டல்கள் கொண்டு வரப்பட்டது.

அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, இந்த சேலைகளை கொண்டு சென்றதாக தகவல் பரவியது. தகவல் அறிந்து அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கொமதேக, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், உடனடியாக செல்வகுமாரின் தோட்டத்து வீட்டுக்கு சென்றனர். இதனால் அதிமுகவினர், துணி பண்டல்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது, திமுக கூட்டணி கட்சியினர், அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் துணி பண்டல்கள் தோட்டத்தில் ஆங்காங்கே போடப்பட்டது. இதனிடையே கொமதேக மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. பல மணி நேரம் கழித்து, தேர்தல் பறக்கும்படையினர் அங்கு வந்து, 6 பண்டல்களை கைப்பற்றினர். இதில் சுமார் 5 ஆயிரம் சேலைகள் இருக்கலாம் என தெரிவித்தனர். பறிமுதல் செய்த சேலை பண்டல்களை, திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டுசென்று ஒப்படைத்தனர்.

Tags : Tiruchenga , admk
× RELATED திருச்செங்கோடு அருகே மேடையில்...