விருத்தாசலம்:கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அமமுக கட்சி கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எனக்கு அதிமுகவினர் பல தொந்தரவுகளை கொடுத்தனர். ஆனால் கடவுள் அருளால் என்னை எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு கொரோனா சோதனை செய்ய, நான் பிரசாரத்தில் இருந்தபோது என்னை அழைத்தார்கள்.
சோதனைக்கு உடனடியாக வரவேண்டும் என வலியுறுத்தி பிரசாரத்தை தடை செய்ய முயற்சித்தார்கள். பின்னர், உணவு இடைவேளையின்போது வருவேன். அப்போது மாதிரி எடுத்துக் கொள்ளுங்கள் என கூறினேன். அதுபோல் வந்தார்கள் டெஸ்ட் எடுத்தார்கள். ஆனால் 24 மணிநேரமாகியும் முடிவு வராமல் இருந்தது. என்னை பிரசாரத்திற்கு போக விடாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணமாக இருந்தது. இதை நான் தெரிந்து கொண்டு தனியார் மருத்துவர்கள் மூலமாக சோதனை எடுத்துக் கொண்டேன். அன்று இரவே நெகட்டிவ் என வந்துவிட்டது.
எனினும் அரசு தரப்பில் எடுத்த முடிவு மறுநாள் ஆகியும் சொல்லவே இல்லை. நான் பிரசாரத்திற்கு செல்வதை தடுப்பதில் தான் இருந்தார்களே தவிர, அந்த முடிவை கொடுங்கள் என்று கேட்டால் அதை கொடுக்கவில்லை. அதற்கு பிறகு எனக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்த பிறகு அரசு தரப்பிலும் நெகட்டிவ் என முடிவை கொடுத்தனர். இவ்வாறு பிரேமலதா கூறினார்.