×

முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: பிரபாகர் ராஜா வாக்குறுதி

சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, கலைஞர் நகர் பகுதிக்குட்பட்ட பிள்ளையார் கோயில் தெரு, அஞ்சுகம் நகர், பாரி தெரு, சப்தகிரி காலனி, வாசுதேவன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிமணியன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் அமோக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவார். நாளுக்கு நாள் திமுகவுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது’ என்றார்.

பிரபாகர் ராஜா பேசுகையில், ‘தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் முன்மாதிரி தொகுதியாக விருகம்பாக்கத்தை மாற்றி காட்டுவேன். இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். அவர்களுக்கு உபகரணங்கள், பரிசுபொருட்கள், சலுகைகள் வழங்கப்படும். கழிவுநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள பட்டா கோரிக்கை நிறைவேற்றப்படும். 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். பிரசாரத்தின்போது பகுதி செயலாளர் கே.கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ.துரைராஜ், எஸ்.டி.தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி, வட்ட செயலாளர்கள் செந்தில்குமார், அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Prabhakar Raja , will turn it into a model block: Prabhakar Raja Promise
× RELATED கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை: பிரபாகர் ராஜா வாக்குறுதி