×

தரிசு நிலத்தில் வசிப்போருக்கு பட்டா : மாதவரம் எஸ்.சுதர்சனம் உறுதி

புழல்: மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் நேற்று சோழவரம் தெற்கு ஒன்றியம் அலமாதி, எடப்பாளையம், பழைய அலமாதி, சாந்தி காலனி, பாலாஜி கார்டன், உப்புரபாளையம், நல்லூர், விஜயநல்லூர், ஆட்டந்தாங்கல், அம்பேத்கர் நகர், பெருமாளடி பாதம், காந்தி நகர், சோலையம்மன் நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் வரவேற்பளித்தனர். அப்போது, அவர் பேசுகையில், ‘அலமாதி மற்றும் நல்லூர் ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தரமான சாலைகள், மின்விளக்கு வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தரப்படும். இப்பகுதிகளில் ரேஷன்கடை, சத்துணவு கூடங்கள் கட்டித்தரப்படும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும், கொரோனா நிவாரணமாக ₹4000 வழங்கப்படும். மகளிர் சுயஉதவி குழுக்கள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா, பெண்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி, ₹24 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும். இந்த பகுதியில் அரசு தரிசு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக மனை பட்டா இலவசமாக வழங்கப்படும்’ என்றார். பிரசாரத்தின்போது சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.



Tags : Patta ,Madhavaram ,S. Sudarsanam , Patta for those living in barren land: Madhavaram S. Sudarsanam confirmed
× RELATED போடி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு..!!