×

மக்கள் நல பணிகள் தொடரும்: மா.சுப்பிரமணியன் பிரசாரம்

சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று 174வது வார்டில் உள்ள  கன்னிகாபுரம், ஐந்து பர்லாங் சாலை, மாந்தோட்டம் தெருக்கள்,  சாத்தாணிப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் வீடு வீடாக நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘174வது வார்டில் கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10.5 லட்சத்தில் நெடுஞ்செழியன் தெரு சந்திப்பில் உள்ள விளையாட்டு திடலுக்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை, ரூ.10 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள், ஐந்து பர்லாங் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.7.5 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கி கொடுத்துள்ளேன். பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ரூ.30 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ரூ.5 லட்சத்தில் உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரேஸ் வியூ காலனியில் சாலையோர பூங்கா மற்றும் அலங்கார விளக்குகள் ரூ.20லட்சத்தில் அமைத்து கொடுத்துள்ளேன். இந்த தொகுதியை மேம்படுத்த மேற்கண்ட பணிகளை செய்துள்ளேன். தொடர்ந்து, மக்கள் நல பணிகள் செய்வேன்,’ என்றார். திமுக பகுதி செயலாளர்கள் துரைராஜ், மற்றும் அவை தலைவர் குணசேகரன், சைதை சம்பத், எஸ்.ஆர்.செந்தில், நேரு நகர் எஸ்.பாட்சா, விசிக ஜேக்கப், மதிமுக சுப்பிரமணி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Ma Subramanian , Public welfare work will continue: Ma Subramanian campaign
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...