×

உத்தமபாளையம் அருகே பயங்கரம் இளம்பெண், குழந்தையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீச்சு-கொடூர காதலன், சிறுவன் கைது

உத்தமபாளையம் : உத்தமபாளையம் அருகே  இளம்பெண், குழந்தையை துண்டு, துண்டாக வெட்டி குளத்தில் வீசிய காதலன் மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியில் உள்ள சொசைட்டி தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி (22). இவருக்கும், மதுரை மாவட்டம், பேரையூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் காசிராஜனுக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கரண் சர்மா (2 வயது) என்ற மகன் உண்டு.

திருமணத்திற்கு முன்பு பெரியகுளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கலைச்செல்வி படித்தார்.அப்போது சின்னமனூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிலம்பரசகண்ணனுடன் (26), கலைச்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. இவருக்கு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளன. கலைச்செல்விக்கு திருமணம் முடிந்த பின்னரும் சிலம்பரசகண்ணனுடன் கள்ளக்காதல் தொடர்ந்தது. அடிக்கடி கள்ளக்காதலனை சந்தித்து தனிமையில் இருந்துள்ளார். கடந்த 2020 செப். 9ம் தேதி குழந்தையுடன் க.புதுப்பட்டியிலிருந்து பேரையூர் செல்வதாக கூறி சென்ற கலைச்செல்வி வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை உத்தமபாளையம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார், கலைச்செல்வியின் செல்போன் தொடர்புகளை ஆராய்ந்தனர். விசாரணையில், கலைச்செல்வி, சிலம்பரச கண்ணனுடன் தொடர்பில் இருந்துள்ளார். தனது நகைகளை அவருக்கு கொடுத்துள்ளார். அவர், நகைகளை விற்று கார் வாங்கி ஓட்டி வந்துள்ளார். கலைச்செல்வி குடும்பத்தினர் நகைகளை பற்றி கேட்க பிரச்னை பெரிதாகியுள்ளது. இதையடுத்து கலைச்செல்வி தனது நகைகளை தருமாறும், இல்லாவிட்டால் தன்னுடன் சேர்ந்து வாழுமாறும் சிலம்பரசகண்ணனை வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து 2020, செப். 9ல் சின்னமனூரில் உள்ள வீட்டிற்கு குழந்தையுடன் கலைச்செல்வியை சிலம்பரசகண்ணன் வரவழைத்துள்ளார். அப்போது நகைகள் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த அவர், இருவரையும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் இறைச்சிக்கடை கத்தியால் இருவரையும் துண்டு, துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் 3 சாக்கு மூட்டைகளில் கட்டி, ஆட்டோவில் ஏற்றி, சின்னமனூர் அய்யனார் குளத்தில் வீசியுள்ளார். இதற்கு அதே ஊரைச் சேர்ந்த 18 வயது சிறுவனும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதையடுத்து 2 பேரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். ஆனால் சிலம்பரசகண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் போலீசார் தன்னை விசாரிக்கக் கூடாது என மனு போட்டிருந்தார். இதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த 18 வயது சிறுவனை, கேரளாவில் போலீசார் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்,  சுமார் 7 மாதத்திற்கு பின், நேற்று சிலம்பரச கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குளத்தில் சிக்கிய எலும்புகள்

சிலம்பரச கண்ணன் கொடுத்த தகவலின்பேரில், சின்னமனூர் அய்யனார் குளத்தில் போலீசார் உடலை தேடினர். 7 மாதம் ஆனதால், மூட்டையில் எலும்புகள் மட்டுமே சிக்கின. அவற்றை தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

Tags : Uththamapalaiyam , Uththamapalaiyam: Police have arrested a teenager, a boy and a boy near Uththamapalaiyam.
× RELATED உத்தமபாளையத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியல்