கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் 750 பெண்கள் பங்கேற்ற “விரல் மை, நம் வலிமை” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நேற்று “விரல் மை, நம் வலிமை” என்பதை வலியுறுத்தும் வகையில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. எஸ்பி அலுவலக மைதானத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில், 750க்கும் அதிகமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ‘சட்டமன்ற பொதுத்தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ‘100 சதவிகிதம் வாக்கு, அதுவே எங்கள் இலக்கு’ என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 750க்கும் அதிகமான அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற “விரல் மை, நம் வலிமை” என்பதை வலியுறுத்தும் வகையில், வாக்களிக்கும் முத்திரையில் ஒரு சேர நின்று, வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,’ என்றார்.
நிகழ்ச்சியில், டிஆர்ஓ சதீஷ், ஏடிஎஸ்பிக்கள் ராஜூ, அன்பு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் செந்தில்குமார், கிருஷ்ணகிரி ஆர்டிஓ கற்பகவள்ளி, மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் தேவராஜ்(பொ), உதவித் தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் பொன்னாலா(பொ) உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.