×

சட்டமன்ற தேர்தல் என்பதை விட கொள்கை ரீதியான போராட்டம்: தமிழ் மண்ணில் திராவிட நெறிக்கு எதிரான சக்தி வெற்றி பெற முடியாது: காதர் மொய்தீன்

* தமிழகத்தில் திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கருத்து கணிப்புகள் சொல்கிறதே?

வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவிருக்கிற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான சமய சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோகமான வெற்றியை பெறும். எந்த சந்தேகமும் இல்லை. இதற்கு காரணம் 10 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆண்ட அதிமுக கொள்கையை இழந்து இருக்கிறது. நாட்டை அடகு வைத்திருக்கிறது. பொருளாதார சிதைவை ஏற்படுத்தியுள்ளது. மக்களுடைய நலவாழ்வை பற்றி கவலைப்படாமல் இருக்கிறது. தங்களுடைய நலன், தங்களுடைய அமைச்சர்களின் நலன், மு.க.ஸ்டாலின் அடிக்கடி சுட்டி காட்டுவது போல கரெப்ஷன், கலெக்‌ஷன், கமிஷன் என்கிற அடிப்படையில் நாட்டையே குட்டிச்சுவராக்கி இருக்கிறார்கள். இதை திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளவர்கள் மட்டும் சொல்லவில்லை. நாட்டு மக்கள் ஒட்டு மொத்தமாக சொல்லக்கூடிய நிலை இன்று உருவாகி இருக்கிறது. ஆகவே வரக்கூடிய தேர்தலில் 10 ஆண்டு கால ஆட்சி நடந்தது போதும். இனி வெற்றி பெற முடியாது. ஆட்சி மாற்றம் தான் வேண்டும். கலைஞர் 2006 முதல் 2011 வரை எப்படி ஒரு அற்புதமான ஆட்சியை தந்தாரோ, அதை விட சிறந்த ஆட்சி தமிழகத்துக்கு வேண்டும் என்பது தான். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. இது நாட்டுமக்களின் பிரதிபலிப்பாக தான் இருக்கிறது.

* மக்களிடம் எதிர்ப்பு உள்ள நிலையில் வாக்குகளை பணம் கொடுத்து பெற்று விடலாம் என்று அதிமுக நினைக்கிறதே?

மிழகத்தில் 6 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள், பணம், பணத்துக்காக ஓட்டு போடுவது, ஓட்டை விற்பது 4 சதவீதத்துக்கு மேலே இருக்கிறது. இதுவரை நடந்த தேர்தலில் பணம் என்பது ஒரு சில இடங்களில் மட்டுமே செல்லுபடியாகுமே தவிர தமிழகம் முழுவதும் பணம் கொடுத்து ஓட்டுக்களை விலை கொடுத்து வாங்கி விட முடியாது. அது சரித்திரம் இல்லை. தமிழக மக்கள் பணத்துக்காக வாக்களிப்பதில்லை. தமிழக மக்கள் ஓட்டை விற்க தயாராக இல்லை. ஓட்டை பணத்துக்காக விற்று விட்டு இன்னும் 5 ஆண்டுகாலம் கஷ்டப்பட தயாராக இல்லை. 10 ஆண்டுகள் கஷ்டப்பட்டது போதும். ஆட்சி மாற்றம் வேண்டும். அதுவும் கலைஞர் ஆட்சி போல நல்லாட்சி வரவிருக்கிறது. பணத்தை வேண்டுமென்றால் அவர்கள் தரலாம். ஆனால், அவர்களிடம் ஓட்டை மட்டும் பெற முடியாது.

* அதிமுக வேட்பாளர்களை மக்கள் விரட்டி திருப்பி அனுப்புகிறார்களே?

அதிமுக அரசின் சார்பாக அறிவிப்புகள் ஆயிரக்கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதனை சாதனைகளை ஆக்கிய பட்டியல் பூஜ்ஜியமாக உள்ளது. இதை கண்ட மக்கள் வெறுப்படைந்து ஆங்காங்கே விரட்டுகிறார்கள். நானும் பல கிராமத்திற்கு சென்றுள்ளேன். கலைஞர் ஆட்சி காலத்தில் கிராமத்தில் உள்ள சாலைகள் அற்புதமாக போடப்பட்டிருக்கும். இப்போது பெரும்பாலான கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக தான் இருக்கிறது. அந்த அவலத்தை பார்க்க கூடிய கிராம மக்கள், அதையும் செய்யாமல் ஓட்டுக் கேட்டு வந்து இருக்கிறீர்கள் என்று தான் விரட்டி அடிக்கின்றனர். ஊர்கள் தோறும் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காக செய்யவில்லை. விவசாய நிலங்களை பாழ்படுத்தி இருக்கிறார்கள். விவசாயத்துக்கு செல்லக்கூடிய வாய்க்கால், கால்வாய் தூர்வாரப்படாமல் மோசடி தான் நடந்து இருக்கிறது. சில இடங்களில் ஊருணிகளை மட்டும் தூர்வாரி விட்டு, பெரும்பாலான நீர்பாசனம் நடக்க கூடிய ஏரிகளில் எந்த வேலையும் நடக்கவில்லை. இதை கண்கூடாக பார்க்கும் மக்கள் தங்களை ஏமாற்றி இவர்கள் வாழ்கிறார்களே தவிர தங்களது வாழ்க்கைக்கு வழி பிறக்கவில்லை என்று தான் விரட்டி அடிக்கின்றனர்.

* அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க, அடுத்து வரும் அரசிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்துமா?

குடிமராமத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடந்த ஊழலை பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய பட்டியலை போட்டு கவர்னரிடம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக திமுக ஆட்சி வந்தவுடன் விசாரணை நடக்கும் என்று நம்புகிறேன்.

* வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை திருப்திகரமாக இருக்கிறதா?

தேர்தல் ஆணையம் நிறைய சட்டங்களை போடுகிறார்கள். அவர்கள் போடும் சட்டத்தால் பாதிக்கப்படுவது பொதுமக்களாக தான் இருக்கின்றனர். தவறு செய்பவர்கள் யாரும் பாதிக்கப்படுகிறார்கள் என தெரியவில்லை. தேர்தல் ஆணையம் தங்களுக்கு தோன்றியதையெல்லாம் சட்டமாக்கி பொதுமக்களை அலைகழிக்கின்றனர் என்பது தான் உண்மை. வியாபாரிகள் கொண்டு செல்லும் பணத்தை மட்டுமே ஆணையம் பறிமுதல் செய்கிறது. உண்மையில் வாக்காளர்களுக்கு கொண்டு செல்லும் பணத்தை பிடித்த மாதிரி தெரியவில்லை.

* சட்டமன்ற தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறதே. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பல முனை போட்டி போன்ற தோற்றம் ஊடகங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் தமிழகத்தில் உள்ள போட்டி திராவிட நெறியை பின்பற்றக்கூடிய இயக்கங்களுக்கும், அதை எதிர்த்து நிற்க கூடிய சக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த தேர்தல். சட்டமன்ற தேர்தல் என்பதை விட கொள்கை ரீதியான போராட்டம் என்றே நான் நினைக்கிறேன். பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற பெரியவர்கள், காமராஜர், காயிதே மில்லத் போன்ற நல்லவர்கள் தமிழகத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட பாடுபட்டார்களோ, எந்த மாதிரியான மக்கள் நலத்திட்டங்களை வகுத்து தர பாடுபட்டு வந்திருக்கிறார்களோ அவற்றிற்கு எதிராக, ஒரு மதரீதியான கொள்கையை புகுத்தி, மத ரீதியிலேயே சிந்தித்து, மதத்தையே அரசியலாக்கி அதற்காக கச்சைகட்டி கொண்டிருக்கிற எதிர்ப்பு சக்தியான பாஜவோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளது. திராவிட நெறிக்கும் அதற்கு எதிர்த்து நிற்கக்கூடிய சக்திக்கு எதிரான போராட்டம். இந்த போராட்டத்தில் தமிழ் மண்ணில் திராவிட நெறிக்கு எதிரான சக்தி வெற்றி பெற முடியாது. எனவே, நாலுமுனை, ஐந்து முனை என்பது உண்மையல்ல. திமுக கூட்டணி கட்சிக்கும்-திராவிட நெறியை எதிர்க்கும் அதிமுக-பாஜ கூட்டணிக்கு இடையே நடக்கும் போராட்டம் தான்.

* மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் பாஜவின் பி டீமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறதே?

நான் எந்த கட்சியையும், ஏ டீம், பி டீம் என்று சொல்ல விரும்பவில்லை. ஆனால், அவர்கள் எல்லாம் ஏதோ ஒரு நப்பாசையில் அரசியலில் அணிகளை வைத்து கொண்டு நிற்கிறார்கள். அவர்கள் அதிமுக-பாஜவை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால் திமுகவை ஆதரித்து இருப்பார்கள்.

* இந்த தேர்தலில் 9 லட்சம் இளம் வாக்காளர்கள் எந்த பக்கம் வாக்காளிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இளைஞர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். வயதானவர்களை விடவும், மத்திய வயதினை உடையவர்களை விட மிக தெளிவாக இருக்கிறார்கள். இளைஞர்கள் இப்போது மிக நுட்பமானவர்களாகவும், அறிவுள்ளவர்களாகவும், வருங்காலத்தை பற்றி சிந்திப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் நாட்டு நடப்பை பார்க்கிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு உழைக்கிறார் என்று பார்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக திமுக வெளியிட்டிருக்க கூடிய தேர்தல் அறிக்கை அவர்களது வாழ்வுக்கு, வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஏழை எளிய மாணவர்கள், படித்து பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்வில் நலம் பயக்கும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு ஆட்சி மாற்றத்திற்காகவும், திமுக தலைமையிலான அரசு ஏற்பட வேண்டும் என்று வாக்களிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களை பற்றி சந்தேகப்பட தேவையில்லை. அவர்கள் நம்மவர்கள். நாட்டை பாதுகாக்க கூடியவர்கள். திராவிட நெறியை தூக்கி நிறுத்தக்கூடிய ஆற்றல் பெற்ற தீரர்கள்.

Tags : Khader Moideen , Kather Moideen
× RELATED திமுக கூட்டணியில் இந்திய யூனியன்...