சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனை, டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் இயக்க தலைவர் டி.எம்.என்.தீபக் தலைமையில் அதன் நிர்வாகிகள் 3 ஆயிரம் பேர் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது டி.எம்.என்.தீபக் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் நடத்திய போராட்டத்தில் மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். அதனால், நாங்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினோம். கொரோனா காலத்தில் பல்வேறு மாற்றுத்திறனாளி இயக்கங்களுக்கு தலா 25 கிலோ அரிசி, 40 ஆயிரம் மாஸ்க் உள்ளிட்டவற்றை வழங்கினார். எனவே, எங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில், இந்த தேர்தலில் நாங்களே நேரடியாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம்,’ என்றனர்.
தொடர்ந்து, மா.சுப்பிரமணியன் தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் அவரை வரவேற்று எங்கள் வாக்கு திமுகவிற்கு தான். நீங்கள் தான் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள், என்று கூறி சால்வை அணிவித்து, மலர் தூவி, ஆரத்தி எடுத்து வாழ்த்தினர். திமுக சைதை மேற்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அவை தலைவர் குணசேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சைதை சம்பத், மதிமுக சுப்பிரமணி, விசிக ஜேக்கப், அன்புதாசன், வட்ட செயலாளர் கோதண்டம், எம்.நாகா, சைதை சாதிக், பாலசுந்தரம், அஞ்சல் என்.ராமன் மற்றும் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.