கொல்கத்தா: தொழில்துறை வளர்ச்சி வளராமல் பிரதமர் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது என்று மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் மார்ச் 27 (நாளை), ஏப். 1, 6, 10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில், நாளை 30 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரியா ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடனும், காங்கிரஸ் கட்சியானது இடதுசாரிகள் மற்றும் இஸ்லாமிய மார்க்க அறிஞர் அப்பாஸ் சித்திக்கியின் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சியுடன் கூட்டணியமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. பாஜகவை பொறுத்தமட்டில் கடந்த 2016 தேர்தலில் வெறும் 4 இடங்களை கைப்பற்றிய நிலையில், இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு களம் இறங்கியுள்ளது. இருப்பினும், ஆட்சியை தக்க வைக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்துள்ளார். மம்தா கூறுகையில், தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது. அவரது (பிரதமர் நரேந்திர மோடியின்) தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது. சில நேரங்களில் அவர் தன்னை சுவாமி விவேகானந்தர் என்று அழைப்பார். சில சமயங்களில் தனது சொந்த பெயருக்குப் தனது பெயருக்குப் பிறகு மைதானத்தின் பெயர் மாற்றுவார். அவரது மூளையில் ஏதோ தவறு இருக்கிறது.
அவரது ஸ்க்ரூ தளர்வானது போல் தெரிகிறது என்றும் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி குறித்து மம்தாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.