டெல்லி: அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் இந்தியாவில் தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக உலக அளவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை கடந்த ஜனவரி 16-ந்தேதி இந்தியா தொடங்கியது. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இதையடுத்து 2-ம் கட்டமாக மார்ச் 1 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மேலும் வரும் ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே தடுப்பூசி திட்டத்திற்கான வயது வரம்பை விரிவுபடுத்தி அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்த வகை செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவிக்கையில், “தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த திட்டத்திற்கான வயது வரம்பு கூடிய விரைவில் விரிவுபடுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.