×

சாலையில் படுத்து டி.டி.வி வேனை முற்றுகையிட்ட அமமுகவினர்

குடியாத்தம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் ஜெயந்தி பத்மநாபன் போட்டியிடுகிறார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதலே கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து பணியை மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. மேலும் மாவட்ட செயலாளர், மண்டல பொறுப்பாளர் ஆகியோரின் அறிவுரையும் ஏற்காமல் தன்னிச்சையாக ஜெயந்தி செயல்பட்டு வருகிறாராம். இதற்கிடையில், வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், மாங்காய் மண்டியில் பிரசாரத்தை முடித்து, நேற்று முன்தினம் திருப்பத்தூர் நோக்கி வேனில் சென்றார்.

அப்போது, பள்ளிகொண்டா டோல்கேட் அருகே டிடிவி.தினகரனின் பிரசார வேனின் முன்பாக சாலையில் படுத்துக்கொண்டு அமமுகவினர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து, குடியாத்தம் தொகுதி வேட்பாளரின் தன்னிச்சையான தேர்தல் பணி குறித்தும், அதனால் கட்சிக்கு தோல்வி ஏற்படும் என்பது குறித்தும் தினகரனிடம் பரபரப்பாக புகார் கூறினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினகரன் உறுதி அளித்ததை தொடர்ந்து, முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : DTV , TTV
× RELATED விதிமீறலில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு