×

ராமர் கோயில் கட்டுவதற்காக 12.42 கோடி குடும்பத்திடம் நிதி திரட்டிய ஆர்எஸ்எஸ்: வசூல் விவரத்தை வெளியிட மறுப்பு

நாக்பூர்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் மட்டுமே ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ₹57 கோடி நிதி திரட்டி உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், விதர்பா பிராந்தியத்தில் மொத்தம்  11 மாவட்டங்கள் உள்ளன. இந்த பிராந்தியத்தின் ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்  தீபக் தம்ஷெட்டிவார் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘ராமர் கோயிலுக்கு நன்கொடை திரட்டும் பிரசாரம் சமீபத்தில் முடிந்தது. ஆர்எஸ்எஸ்.சை சேர்ந்த 7,512 பெண்கள் உட்பட மொத்தம் 70,796 தன்னார்வலர்கள் இதில் ஈடுபட்டனர்.

இவர்கள் விதர்பாவில் 12,310 கிராமங்களில் உள்ள  27 லட்சத்து 67 ஆயிரத்து 991 குடும்பங்களை சந்தித்து, மொத்தம் ₹57 கோடி நன்கொடையை வசூலித்துள்ளனர். ராமர் கோயில் நன்கொடை பிரசாரத்தில் மொத்தம் 20 லட்சத்து 64 ஆயிரத்து 622 தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். 5 லட்சத்து 45 ஆயிரத்து 737 கிராமங்களில் 12 கோடியே 42 லட்சத்து 21 ஆயிரத்து 214 குடும்பங்களை சந்தித்துள்ளனர்,” என்றார். எனினும், நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் வசூலித்த மொத்த நன்கொடை எவ்வளவு என்ற விவரத்தை அவர் கூறவில்லை.

Tags : RSS ,Ram temple , Ram Temple, 12.42 crore, Finance, RSS
× RELATED கேரளாவில் ராகுல்காந்தி தீவிர வாக்கு சேகரிப்பு..!!