கோலார்: கோலார் தாலுகா, ராஜகல்லஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி கண்காணிப்பு அதிகாரி ராமகிருஷ்ணப்பா பேசும்போது, மாநிலத்தில் அமைப்புசாரா தொழில் பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஏழை, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் ஆங்கில பள்ளி களில் படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். அவர்களின் நலனுக்காக மாநில அரசின் சார்பில் கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதுடன் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலம் பாடமொழியாக நடத்தப்படுகிறது.
முழுக்க முழுக்க அரசு பள்ளியாக இயங்கும் இதில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்க வேண்டும். கடந்தாண்டு கொரோனா காலத்தில் தனியார பள்ளிகளின் டார்ச்சர் தாங்க முடியாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். மேலும் அரசு பள்ளிகள் மேம்படுத்த நாடாளுமன்ற, சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து நிதியுதவி செய்ய வேண்டும். கிராம பஞ்சாயத்துகள் மானியம் வழங்கி மேம்படுத்துவதின் மூலம் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று கேட்டுகொண்டார்.