கலபுர்கி: கலபுர்கி மும்பை இடையேயான முதல் விமான சேவை நேற்று தொடங்கியது. கலபுர்கி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, திருப்பதி, மற்றும் டெல்லிக்கு நேரடி விமானங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கலபுர்கியில் இருந்து அதிக பயணிகள் மும்பைக்கு செல்வதை கருத்தில் கொண்டு அலையர் ஏர் விமான நிறுவனம் கலபுர்கியில் இருந்து மும்பைக்கு நேரடி விமானத்தை இயக்க திட்டமிட்டு இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்நிலையில் நேற்று மும்பையில் இருந்து கலபுர்கிக்கு முதல் நேரடி விமானம் வந்தடைந்தது. காலை 9.07 மணிக்கு புறப்பட்ட விமானம் காலை 9.40 மணிக்கு 22 பயணிகளுடன் கலபுர்கியை வந்தடைந்தது.
கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் இதனை கட்டுப்படுத்த கடந்த 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து விமானத்தில் வந்த பயணிகளிடம் சான்றிதழ் சோதனை செய்யப்பட்டது. அவ்வாறு சான்றிதழ் பெறாத பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.