புதுடெல்லி; டெல்லி ஜிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட கைதியை துப்பாக்கிச்சூடு நடத்தி ஒரு கும்பல் பட்டப்பகலில் மீட்டுச்சென்றது. இந்த மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார். டெல்லியில் பிரபல ரவுடி கோகி கும்பலை சேர்ந்தவர் குல்தீப் என்கிற பாஜ்ஜா. ஆள்கடத்தில், கொலை, கொள்ளையில் கைதேர்ந்தவன். இவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் குர்கானில் வைத்து போலீசார் கைது செய்து இருந்தனர். மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். மருத்துவ சிகிச்சைக்காக நேற்று பகல் 12.30 மணிக்கு கிழக்கு டெல்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சிகிச்சை முடிந்து குல்தீப்பை அழைத்துக்கொண்டு மருத்துவமனையில் இருந்து போலீசார் வெளியே வந்தனர்.
அப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த ஸ்கார்பியோ கார் மற்றும் பைக்கில் வந்த ஒரு கும்பல் திடீரென குல்தீப்பை பாதுகாப்பாக அழைத்து வந்த போலீசார் மீது மிளகாய் பொடி தூவினர். இதை எதிர்பார்க்காத போலீசார் நிலை குலைந்தனர். அந்த சமயத்தில் ரவுடி கும்பல் சரமாரியாக போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் பதிலுக்கு சரமாரியாக சுட்டனர். சுமார் 12 ரவுண்டு போலீசாரும் திருப்பி சுட்டனர். பொதுமக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நேரத்தில் இருதரப்பினரும் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பரபரப்பான அந்த பகுதி நேற்று களேபரமாக மாறியது. இந்த சூழலில் போலீஸ் பிடியில் இருந்த குல்தீப்பை அந்த ரவுடிக்கும்பல் மீட்டு தப்பிச்சென்றது. இந்த மோதலில் ரவுடி கும்பலில் ஒருவன் பலியானான். அவன் பெயர் ரவி. இன்னொருவன் குண்டுகாயம் அடைந்தான். அவன் பெயர் அங்கேஷ். இருவருக்கும் 25 முதல் 28 வயது இருக்கும். குண்டு காயம் அடைந்ததில் பிடிபட்ட அங்கேஷை போலீசார் பிடித்துள்ளனர். இதுபற்றி உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு டெல்லி இணை கமிஷனர் அலோக்குமார் இதுபற்றி நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். டெல்லியில் பட்டப்பகலில் துணிகரமாக போலீசாரை தாக்கி கைதியை மீட்டுச்சென்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல ரவுடி, கூட்டாளியை சுட்டுப்பிடித்த போலீசார்
டெல்லியில் பிரபல ரவுடி ரோகித் சவுத்திரி. இவரது தலைக்கு போலீசார் ரூ.4 லட்சம் பரிசு அறிவித்து இருந்தனர். இவனது கூட்டாளி பிரவீன் என்கிற திட்டு. இவனுக்கு ரூ. 2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் இருவர் மீது குற்றவியல் சட்டம், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று பிரகதி மெய்டன் அருகே பைரான்மார்க் பகுதியில் இருவரும் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு அதிரடிப்படையினர் ரகசியமாக குவிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை 4.50 மணி அளவில் அந்த வழியாக வந்த காரை மறித்த போது கார் நிற்கவில்லை. மேலும் காரில் இருந்தவர்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
இதையடுத்து போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பேர் காலிலும் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அவர்களை ஆர்எம்எல் மருத்துவமனையில் சிகிச்கைக்காக சேர்க்கப்பட்டனர். ஏசிபி பங்கஜ் தலைமையில் நடந்த இந்த என்கவுண்டரில் எஸ்ஐ பிரியங்காவும் கலந்து கொண்டார். டெல்லியில் நடந்த என்கவுண்டரில் ஒரு பெண் அதிகாரி கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.