பெங்களூரு: கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை 5 ஆயிரம் கோடியை சர்க்கரை ஆலை உரிமையாளர்களிடம் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளாததால் அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தப்படும் என கர்நாடக மாநில கரும்பு விவசாய சங்கத்தலைவர் குருபூரு சாந்தகுமார் தெரிவித்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், விவசாயிகள் பயிர் செய்துள்ள கரும்பை சர்க்கரை ஆலை நிறுவனங்கள் கொள்முதல் செய்தன. ஆனால், இதுவரை கரும்புக்கான நிலுவை தொகை 5 ஆயிரம் கோடி வழங்கப்படவில்லை. இத்தொகையை பெற்றுத்தர அரசுக்கு பல முறை கோரிக்கை விடப்பட்டது. ஆனால், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே அரசு நடவடிக்கை மேற்கொள்ளாததை கண்டித்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
மேலும் கரும்பு அறுவடை செய்யும் போது அதற்கான கூலியும் சர்க்கரை ஆலை நிறுவனங்கள் கொடுக்க வேண்டும். கரும்புக்கான விலை நிர்ணயம் செய்வது உட்பட அனைத்து பிரச்னைகளையும் சுலபமாக சமாளிக்க விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலை நிறுவனங்கள் இடையே சுமுகமான நிலை உருவாகும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய அரசு முன்வரவேண்டும். சர்க்கரை விலை உயர்ந்துள்ள நிலையில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்துள்ள கரும்புக்கான தொகையை சர்க்கரை ஆலை நிறுவனங்கள் கொடுக்காததால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு சென்றுள்ளனர்’’ என்றார்.