×

'பணமதிப்பிழப்பு அறிவித்து மக்களை தெருவில் நிற்க வைத்தவர் மோடி'...'மோடி என்ன சொன்னாலும் அப்படியே செய்பவர் பழனிசாமி'!: உதயநிதி தாக்கு..!!

தூத்துக்குடி: கொரோனா காலத்தில் மக்களுக்கு நிதி உதவி அளிக்க முன்வராத பிரதமர் மோடி 8 ஆயிரம் கோடி ரூபாயில் இரண்டு சொகுசு விமானங்கள் வாங்கியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து காயல்பட்டிணத்தில் வாக்கு சேகரித்த அவர், மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார். அங்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை அடுத்து இது காயல்பட்டிணம் அல்ல கலைஞர்பட்டிணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார். ஒரேநாள் இரவில் 1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மோடி அறிவித்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்க நேரிட்டதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 72 கோடி ரூபாய் செலவு என்று கூறுவதை நம்ப முடியவில்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், அங்கு ஒரு செங்கல் மட்டுமே இருந்ததாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி தானே முதல் ஆளாக கைதானதாக அவர் தெரிவித்தார். சி.ஏ.ஏ. சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று சட்டப்பேரவையில் கூறிய எடப்பாடி பழனிசாமி, தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்ப்பதாகவும், மாற்றி கூறுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடிமை ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் திமுக-வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.


Tags : Modi ,Palanisam , Depreciation, Modi, Palanisamy, Udayanidhi
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...