×

தொகுதி முழுதும் கால்வாய் வசதி: அசன் மவுலானா வாக்குறுதி

சென்னை: வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் அசன் மவுலானா, வேளச்சேரி மெயின் ரோடு பகுதியில் நேற்று மாலை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அவர் சென்ற இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்தும், அசன் மவுலானாவுக்கு வெற்றி திலகமிட்டு, “எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்” என வாக்குறுதி அளித்தனர்.  அப்போது அவர் பேசியதாவது, ‘‘அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் சீராக இல்லை. இதனால் தான் வேளச்சேரி தொகுதியை அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக புறக்கணித்துவிட்டது. அங்கு கால்வாய் வசதிகள் எதுவும் செய்து தரப்படாததால் தொகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. இந்த பிரச்னைகள் எல்லாம் திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன்.

எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் உங்களில் ஒருவனாக இருந்து வேளச்சேரி தொகுதியை மேம்படுத்தி காட்டுவேன் என்று உறுதி அளிக்கிறேன்’’ என்றார்.  இதில், திமுக பகுதி செயலாளர் சேகர் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர். மேலும், மறைந்த முதல்வர் எம்ஜிஆரை எதிர்த்து 1977ல் போட்டியிட்ட வேளச்சேரியில் வசித்து வரும் முருகேசன் நாயக்கரை அசன் மவுலானா நேரில் சந்தித்து ஆசி பெற்றார்

Tags : Asan ,Maulana , Canal facility across the block: Promise of Asan Maulana
× RELATED கொலை வழக்கு குற்றவாளிகள் வேறு...