கோவை: அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரை தமிழக தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜாமணிக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.
ஆனால் அந்த புகார்கள் மீது கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவரோடு கோவை மாநகர காவல் ஆணையர் சுமத் சரணையும் தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது.
இவர்களை தேர்தலுக்கு சம்பந்த இல்லாத துறைக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்தது கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாநகர காவல் ஆணையராக ஆசிர்வாதம் டேவிட்சன்னை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.