×

அதிமுகவின் மவுனத்தை தமிழ்நாட்டு மக்களும் ஈழத்தமிழர்களும் மன்னிக்க மாட்டார்கள் : டிடிவி தினகரன் காட்டம்!!

சென்னை : ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பின் போது இந்தியா வெளிநடப்பு செய்ததை கண்டித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் அரங்கேற்றப்பட்ட போர் குற்றங்கள் குறித்து ஆறு நாடுகளின் சார்பில் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்துள்ளது தமிழர்களுக்கு மத்திய அரசு இழைத்த மாபெரும் துரோகமாகும்.

பல லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததில் இலங்கை அரசுக்கு பங்கு இருந்தது. அதுதான் அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்று உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், இது தொடர்பான தீர்மானத்தில் வாக்கெடுப்பின் போது இந்தியா வெளிநடப்பு செய்வதற்கு இலங்கை அரசு பாராட்டு தெரிவித்து இருக்கிறது. அந்த அளவிற்கு இனப்படுகொலையில் பங்கெடுத்த இலங்கைக்கு இந்தியா உதவி இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. தமிழ் சமூகம் இதை ஒருபோதும் மன்னிக்காது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தங்களின் தேர்தல் அறிக்கையில் இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி இருந்த அதிமுக கடந்த சில நாட்களாகவும் சரி, இந்த வாக்கெடுப்பு முடிந்த பிறகும் சரி மௌனமாக வேடிக்கை பார்ப்பதை தமிழ்நாட்டு மக்களும் ஈழத்தமிழர்களும் மன்னிக்க மாட்டார்கள். இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமலேயே இலங்கைக்கு எதிரான அந்த தீர்மானம் நிறைவேற்றி நிறைவேறி இருப்பது ஓரளவு ஆறுதல் தருகிறது.

இதன் தொடர்ச்சியாக விசாரணை நடக்கும் போது, இந்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் உரிய வகையில் தண்டிக்கப்பட வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Eelam ,Tamils ,AIADMK ,DTV ,Dinakaran , டிடிவி தினகரன்
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...