கோவை : கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வடவள்ளி சண்முகசுந்தரம் நேற்று ரத்தினபுரி 5 முக்கு கண்ணப்ப நகர் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது: வடவள்ளி பேரூராட்சியில் 20 ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக பணியாற்றி உள்ளேன். என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு 24 மணி நேரமும் சேவையாற்றி உள்ளேன். எதிர்க்கட்சியினர் என்னை வடவள்ளி தவிர வேறு பகுதிகளில் பொதுமக்கள் அறிய மாட்டார்கள் என பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
நான் நிற்பது கலைஞரின் உதயசூரியன் சின்னத்தில். உதயசூரியனுக்கு வேறு அறிமுகம் தேவையில்லை. உதயசூரியன் என்னை தொகுதி மக்களுக்கு அடையாளம் காட்டும். என்னை நம்பி வாக்களித்த பேரூராட்சி மக்களுக்கு செய்த தொண்டினைபோல் வடக்கு தொகுதி மக்களுக்கும் நிச்சயமாக நான் சேவையாற்றுவேன். இவ்வாறு வேட்பாளர் வடவள்ளி சண்முகசுந்தரம் பேசினார்.
பிரசாரத்தின் போது கோவை எம்.பி. நடராஜன் பேசியதாவது: தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக விளங்கும் மத்திய பாஜ அரசு மற்றும் அதனுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக அரசு ஆகியவற்றை அடியோடு அகற்ற இந்த முறை உதயசூரியனுக்கு
வாக்களிக்க வேண்டும். கலைஞரின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக விளங்குவதுபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயாரித்த தேர்தல் அறிக்கையும் கதாநாயகனாக திகழ்கிறது.
என்னை கோவை தொகுதியில் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தது போல் வடக்கு தொகுதி வேட்பாளர் சண்முகசுந்தரத்தை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.இதில் காங்கிரஸ் மாநில துணை தலைவர் சிவக்குமார், பகுதி செயலாளர் கணபதி லோகு, மகளிர் அணி தொண்டர் அணி மாநில துணை அமைப்பாளர் மீனா லோகு, விசிக மாவட்ட செயலாளர் இலக்கியன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் செல்வமணி, பஷீர், பொறுப்புக் குழு உறுப்பினர் குப்புசாமி, நந்தகுமார், ராமநாதன், கண்ணன், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வடவள்ளி சண்முகசுந்தரத்தை ஆதரித்து இன்று திருச்சி சிவா எம்.பி. கோவையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.இன்று மாலை 4 மணிக்கு வீரகேரளம் பகுதியிலும், மாலை 5 மணிக்கு குப்பகோனம்புதூர், அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மணியகாரம் பாளையத்திலும் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டுகிறார்.