சென்னை: சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்துக்கு கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வருகிறார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்துக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 330 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.
ஏற்கனவே தமிழகத்துக்கு 65 கம்பெனி வீரர்கள் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும், தற்போது பறக்கும் படையில் இணைந்து வாகன சோதனை உள்ளிட்ட முக்கிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்க இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.