சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளுக்கு கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவப்படையினர் வரவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற 6ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. இதனால் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளர்களின் செலவை கண்காணிக்க செலவின பார்வையாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்து வருகிறது.
தொடர்ந்து, தேர்தல் தொடர்பாக அனைத்து பணிகளிலும் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 65 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழகம் வந்துள்ளனர். பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், அங்கு கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இந்நிலையில் கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழகம் வர உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இவர்களுடன் சேர்த்து மொத்தமாக 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் சோதனைசாவடிகளிலும், பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுக்களுடனும் சேர்ந்து பணியாற்ற உள்ளதாக சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.