×

இலங்கை கடற்படை தாக்குதலில் பலியான 4 மீனவர் குடும்பத்துக்கு இழப்பீடு: அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கச்சத்தீவு பகுதியில் கடந்த ஜனவரி 18ம் தேதி ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மெசைய்யா, நாகராஜ், சாம், செந்தில் குமார் ஆகியோர் மீன் பிடித்து கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர், மீன்பிடி படகு மீது மோதி, படகை கடலில் மூழ்கடித்ததாகவும், இதில் பலியான நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்கும் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரி மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் அதன் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள்,  கோரிக்கை குறித்து மனுதாரர் புதிய விண்ணப்பம் அளிக்க வேண்டும். அந்த புதிய விண்ணப்பத்தை  பரிசீலித்து நால்வரின் மரணத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து 8 வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலித்து மத்திய அரசோ அல்லது மாநில அரசோ பணி வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும். மீனவர்கள் பலியான சம்பவம் குறித்து புலன் விசாரணையை விரைந்து முடித்து, மரணத்திற்கான காரணத்தை அவர்களின் குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு  வழக்கை முடித்து வைத்தனர்.



Tags : Sri Lankan naval attack ,ICC , Sri Lanka Navy kills 4 fishermen, compensates family:
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...