×

கொரோனா அதிகரிப்பு: கல்லூரிகள் பல்கலை மூடல்: ஆன்லைன் மூலம் வகுப்புகள் 6 நாள் நடைபெறும்

சென்னை: கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக இன்று முதல் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி  நிறுவனங்களிலும்  மற்றும் தமிழகத்தில் செயல்படும் அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகளிலும்  வகுப்புகள் இணைய வழி  முறையில் வாரத்தில் ஆறு நாட்கள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலும், பல்கலைக்கழக துணைவேந்தர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் முதற்கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதியன்று முதுகலை இறுதி ஆண்டு மற்றும் ஆராய்ச்சி மாணாக்கர்களுக்கான கல்லூரிகள் திறக்கவும் மற்றும் 8.02.2021 முதல் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரிகள் திறக்கவும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி கல்லூரிகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டது. அவ்வாறு கல்லூரிக்கு வரும் மாணாக்கர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.

தற்போது, தமிழ் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டார்.  அப்போது  அனைத்து துறைகளின் அதிகாரிகளின் பரிந்துரைகளை ஏற்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மற்றும் உயர்கல்வித் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளோடு ஆலோசிக்கப்பட்டது.

கோவிட் தொற்று அதிகரித்து வருவதாலும், கோவிட் தொற்றால் மாணவர்களும் அதனால் பொதுமக்களும் பாதிக்கப்படக்கூடாது  என்பதாலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி (இன்று) வரும் 23ம் தேதி முதல் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி  நிறுவனங்களிலும் மற்றும் தமிழகத்தில் செயல்படும் அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகளிலும் வகுப்புகள் இணைய வழி  முறையில் வாரத்தில் ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

அறிவியல், பொறியியல்  மற்றும் பலவகைத்தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு  குறிப்பாக  இறுதி பருவ மாணவர்களுக்கு செயல்முறை வகுப்புகள் மற்றும் செயல்முறை தேர்வுகள் வரும் 31ம் தேதிக்குள் முடித்திடவும்.  மேலும்,  இந்த பருவத்திற்கான இறுதித் தேர்வுகளை இணைய வழியில் மட்டுமே நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Corona ,Colleges University , Corona, Colleges
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...