×

வேளச்சேரி வேட்பாளரை தொடர்ந்து அண்ணாநகர் வேட்பாளர் பொன்ராஜுக்கு கொரோனா: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அதிர்ச்சி

சென்னை: வேளச்சேரி தொகுதி வேட்பாளரை தொடர்ந்து, அண்ணாநகர் மநீம வேட்பாளர் பொன்ராஜுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுக்கு கடந்த 18ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அண்ணாநகர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

பொன்ராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் கமலுடன் கலந்து கொண்டார். தொடர்ந்து அண்ணாநகர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொன்ராஜ் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாது: நான் கடந்த 4 நாட்களாக, தொடர்ந்து தூக்கமில்லாத இரவுகளால், தேர்தல் பணிகளால் உடல்நலம் சரி இல்லாமல் காய்ச்சலுக்கும், உடம்பு வலிக்கும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தேன். எனக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த இக்கட்டான தேர்தல் நேரத்தில் குறுகிய காலத்தில், நான் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டிய நிலையில் அண்ணா நகர் தொகுதி மக்களை சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறேன். ஆனால், களத்தில் மக்கள் நீதி மய்யத்தின் படைவீரர்கள் அண்ணா நகர் தொகுதி முழுக்க உங்கள் வீடு தேடி வந்து உங்களை சந்திப்பார்கள். அவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த நன்றி. நான் நேரடியாக வர முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். கூடிய சீக்கிரம் குணமடைந்து தேர்தலுக்கு முன்பாக உங்களை வந்து கண்டிப்பாக சந்திப்பேன் என்ற நம்பிக்கையோடு நான் வர இயலாத சூழ்நிலையை பொறுத்தருள வேண்டுகிறேன். ஆனால் தொடர்ந்து சோசியல் மீடியா, டிவி, யூடியூப் மூலம் தமிழக மக்களை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன். சூம் மீட்டிங் மூலம் நான் அண்ணா நகர் தொகுதி மக்களோடு கலந்துரையாட ஏற்பாடுகள் கூடிய விரைவில் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,People's Justice Center ,Anna Nagar ,Ponraj , MNM
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...