×

காரை சுற்றி பட்டாசு வெடிக்க வைத்தனர்: என்னை கொல்ல அமமுகவினர் முயற்சி: அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

கோவில்பட்டி: தேர்தல் தோல்வி பயத்தால் என்னை கொல்ல முயற்சி செய்கின்றனர் என்று அமமுகவினர் மீது கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். கோவில்பட்டி அருகே ராஜாபுதுக்குடியில், அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி:  கோவில்பட்டி தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி உள்ளேன். இதனால் எனது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நாங்கள் பிரசாரத்துக்கு செல்வதுபோல் அமமுகவினரும் பிரசாரம் செய்து வருகின்றனர். எனக்கு பெருகிவரும் ஆதரவை பார்த்து தோல்வி பயத்தால் எனது பிரசார பயணத்தை முடக்கி விட வேண்டும் என அமமுகவினர் எண்ணுகின்றனர்.

நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) பல்வேறு இடங்களில் பிரசாரத்தை முடித்து விட்டு இரவு கோவில்பட்டி அன்னை தெரசாநகர் பகுதிக்கு சென்றேன். அப்போது அங்கு அமமுகவினருக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்ததால், ஒரே சமயத்தில் நாங்கள் வரும் நிலை வந்தது. அவர்கள் அந்த இடத்துக்கு வரும்போது வீணான பிரச்னைகள் எழும் என்பதால் அங்கு பிரசாரத்தை தவிர்த்துவிட்டு உடனடியாக புறப்பட்டேன். அப்போது எதிரே அமமுகவினரின் வாகனங்கள் வந்தன. தேவையில்லாத பிரசனைகள் உருவாகும் என்பதால் என்னுடன் வந்த வாகனங்களை செல்லுமாறு கூறினேன். நான் புறப்பட்டு வரும்போது எதிரே வந்த அமமுகவினர் என் காருக்கு வழிவிடாமல் சாலையை மறித்தனர். நான் அமைதியாக இருந்தேன். எனது ஓட்டுனரிடம் அவர்கள் சென்ற பின்னர் நாம் புறப்படலாம் என கூறினேன். 2 நிமிடங்கள் பொறுத்து இருந்தால் நான் அந்த இடத்தை கடந்து இருப்பேன்.
ஆனால், திட்டமிட்டு எனது கார் நகருவதற்கு முன் வழிமறித்ததோடு 5 ஆயிரம் வாலா பட்டாசை எனது காரை சுற்றி வெடித்தனர்.

இதனால் புகைமூட்டமாகி எனது கார் தீப்பிடிக்கும் சூழல் உருவானது. நான் வாகனத்தில் இருந்தேன். இதில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்தால், கார் தீப்பிடித்து எனது உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், இதற்கெல்லாம் நான் அஞ்சப் போவதில்லை. நாங்கள் எம்ஜிஆர் பாதையில் அரசியலுக்கு வந்தவர்கள். இதுபோன்ற பிரச்னைகள் யார் மூலம் வந்தாலும் துணிச்சலாக எதிர்கொள்வோம். நான் வேட்பாளர் மட்டுமல்ல அமைச்சரும் கூட, எனக்கே இந்த நிலையை உருவாக்கினார்கள் என்றால், இவர்கள் தொகுதிக்குள் வந்தால் என்ன நிலை வரும் என மக்கள் இப்போதே விவாதிக்க தொடங்கி விட்டனர். நான் தனியாக ஒரு வாகனத்தில் மட்டும் சென்று கூட பிரசாரத்தில் ஈடுபட தயாராக உள்ளேன். நான் மக்களை சந்திப்பதை தடுக்க எந்த சக்தியாலும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Minister ,Kadampur Raju , Minister Kadampur Raju, accused
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...