புதுடெல்லி: மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயதை 25 வயதிலிருந்து 21 ஆண்டுகளாகக் குறைக்கும் புதிய கலால் கொள்கைக்கு டெல்லி அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுபற்றி துணை முதல்வர் சிசோடியா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: புதிய கலால் கொள்கைக்கு அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தேசிய தலைநகரில் புதிய மதுபானக் கடைகள் திறக்கப்படமாட்டாது. அரசாங்கம் எந்த மதுபானக் கடைகளையும் நடத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் டெல்லியில் 60 சதவீத மதுபானக் கடைகள் அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. மதுபான கடைகளை சமஅளவில் பங்கிடடு வழங்குவதை அரசு உறுதி செய்யும். அப்போது தான் மதுபான மாபியா கும்பல் துடைத்தெறியப்படும். கலால் துறையில் இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு கூடுதலாக 20 சதவீத வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.