சோளிங்கர் : சோளிங்கரில் கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.சோளிங்கர் அடுத்த செங்கலானூர் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது 60 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் ஒன்று கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சோளிங்கர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் நிலைய அலுவலர் கோபால் தலைமையிலான மீட்பு படை வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று சுமார் ஒருமணி நேரம் போராடி கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்டு வனச்சரக காவலர்கள் கந்தசாமி, கார்த்திகேயன் ஆகியோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
இதையடுத்து வனக்காவலர்கள் புள்ளி மானை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். புள்ளி மான் துள்ளி குதித்து வனப்பகுதிக்குள் ஓடிச் சென்றது.