திண்டிவனம் : திண்டிவனத்தில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். திண்டிவனத்தில் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ வீரர்கள் திண்டிவனம் வந்தனர். இவர்கள் நேற்று மாலை திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்கும் விதத்தில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கொடி அணிவகுப்பு தொடங்கினர். ராணுவ கொடி அணிவகுப்பை திண்டிவனம் சார் ஆட்சியர் அனு துவக்கி வைத்து, துணை ராணுவத்தினருடன் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்றார்.
இதில் திண்டிவனம் உட்கோட்ட டிஎஸ்பி கணேசன், திண்டிவனம் காவல் நிலைய ஆய்வாளர் மூர்த்தி, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா, உதவி ஆய்வாளர்கள் தமிழ்மணி, வினோத்ராஜ், ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் மற்றும் 100க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தொடங்கி நேரு வீதி, செஞ்சி பேருந்து நிறுத்தம், பாரதி வீதி, காந்தி சிலை, தீர்த்தக்குளம், மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நிறைவு செய்தனர்.