ஊட்டி : ஊட்டி தமிழகம் மாளிகையில் கோடை சீசனை முன்னிட்டு நடவு செய்யப்பட்ட மலர் செடிகளை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலாதலங்கள் நிறைந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்கு தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்டவைகள் உள்ளன.
கோடை சீசனின் போது வர கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு இப்பூங்காக்களில் பல்வேறு வகை மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படும். இதேபோல் ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகை பூங்காவிலும் தோட்டக்கலை துறை சார்பில் கோடை சீசனை முன்னிட்டு மலர் செடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கோடை சீசனுக்காக தமிழகம் மாளிகை பூங்கா, கண்ணாடி மாளிகை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் மலர் செடிகளுக்கு ஊழியர்கள் தண்ணீர் பாய்ச்சி பராமரிப்பு செய்து வருகின்றனர். கண்ணாடி மாளிகையில் நடவு செய்யப்பட்ட மலர்கள் பூக்க துவங்கியுள்ள நிலையில், தமிழகம் மாளிகை பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் வரும் ஏப்ரல், மே மாதங்களில் பூத்து குலுங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.