மதுரை: அரசியல் கட்சி பிரச்சார கூட்டங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையை பின்பற்றக் கோரிய வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை இந்த கருத்தை கூறியுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வாக்குறுதி மற்றும் செயல்பாடுகளை முன்னிறுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துள்ளதால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் தேர்தல் பிரச்சாரத்தில் முறையாக விதிகளை பின்பற்றவில்லை என பலதரப்பினர் கூறிவந்த நிலையில், உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் கட்சி பிரச்சார கூட்டங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா விதிகள் பின்பற்றப்படுவதில்லை என வேதனை தெரிவித்தனர். பின்னர் அனைத்து அரசியல் கட்சிகளும் பாகுபாடின்றி முறையாக கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
மேலும் சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை தமிழக அரசு கண்டிப்புடன் செய்யப்படுத்த வேண்டும் என கூறி, அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.