காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கூத்தலூர் ஊராட்சியை சேர்ந்தது ஆளவந்தான்பட்டி. இப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர் வீடுகளில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் நேற்று பிற்பகல் அதிமுக மகளிர் அணி ஒன்றிய துணை செயலாளர் ஆனந்தி வீட்டில் சோதனை செய்தனர். முடிவில் ஆனந்தி வீட்டில் ரூ.70 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே கல்லல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்க பல லட்சம் வரை ஒரு சிலர் வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
சோதனை நடத்தி அதை பறிமுதல் செய்ய வேண்டும் என திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி, சாயல்குடி ஒன்றியத்திலுள்ள காவாகுளம், கீழக்கிடாரம், சிக்கல் பகுதியில் உள்ள கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளரை வரவேற்று கிராம பெண்கள் ஆரத்தி எடுத்தனர். பிரசாரம் செய்து விட்டு வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி புறம்படும்போது, அங்கு கூடியிருந்த பெண்களுக்கு அதிமுக நிர்வாகி ஒருவர் பணம் வழங்கினார். பலர் வரிசையாக நின்று பணத்தை பெற்று சென்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.