×

லாட்ஜில் அடைத்து சிறுமி கூட்டு பலாத்காரம் காதலன் உள்பட 3 பேர் போக்சோவில் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லியை சேர்ந்த பெற்றோர், தங்களது 15 வயது மகளை காணவில்லை என பூந்தமல்லி போலீசில் சில நாட்களுக்கு முன் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த சிறுமி வீட்டிற்கு திரும்பி வந்தாள். அவளிடம் விசாரித்தபோது, கார்த்தி என்பவன் தன்னை காதலித்து வந்தான். அவன் என்னை சென்னையில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்து சென்று, ஒரு அறையில் தங்கவைத்து பாலியல் பலாத்காரம் செய்தான். பின்னர், அவனது நண்பர்கள் 2 பேரை வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தான். அவர்களிடம் இருந்து தப்பி வந்தேன், என கூறினாள்.  அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி விசாரணையில், குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரத்தை சேர்ந்த காதலன் கார்த்தி (23), அவனது நண்பர்கள் பூந்தமல்லியை சேர்ந்த மணி (26), செல்வராஜ் (23), ஆகிய 3 பேர், சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிந்தது. அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்: மேற்கு தாம்பரம் கஸ்தூரி பாய்  நகரை சேர்ந்தவர் அன்பழகன் (45). போக்குவரத்துக்கழக துப்புரவு  ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த 7  வயது சிறுமிக்கு, நேற்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால்,  அதிர்ச்சியடைந்த சிறுமி அலறி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் திரண்டு சிறுமியை மீட்டனர். பின்னர்,  அன்பழகனை சராமரியாக அடித்து உதைத்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்பழகன் மீது தாக்குதல் நடத்திய,  சிறுமியின் உறவினர்கள் மீது குரோம்பேட்டை  போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.
* கொருக்குபேட்டையை சேர்ந்த 14 வயது  சிறுமி வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து  வருகிறாள். இச்சிறுமி டியூஷன் சென்று வரும்போது, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பின்தொடர்ந்து, தன்னை காதலிக்கும்படி தொல்லை  கொடுத்துள்ளான். மறுத்தால், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இதுபற்றி சிறுமி, தனது பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து, அவர்கள்  வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் சிறுவனை கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Tags : Bokso , Lodge, girl gang, rape, pox, arrest
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...