டெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும்கூட, ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பது கவலை அளிக்கும் அம்சமாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் 3 நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
கொரோனா தொற்றால் பாமர மக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், பல்வேறு திரைபிரபலங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்தநிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடந்த 19-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மார்ச் 19-ம் தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் தனிமைப்படுத்தி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராகவுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.