சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மு.க.ஸ்டாலினை ஆதரித்து கே.எஸ்.அழகிரி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர்; எங்கள் கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன். விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மன்மோகன் சிங்குக்கு பொருளாதாரம் தெரியும், அதனால் பெட்ரோல் டீசல், சிலிண்டர் விலையை குறைத்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறந்த பொருளாதார கொள்கை இல்லை என குற்றம் சாட்டினார். கச்சா எண்ணெய் விலை சரிபாதி குறைந்து இருந்தாலும் நமது நாட்டில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கிறது. தரமான மனிதரை தரமான இடத்தில அமர வைக்க வேண்டியது மக்களின் கடமையாகும். திமுக கூட்டணியில் இருப்பவர்கள் கொள்கைவாதிகள், அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள் என தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கும் நமக்கும் கருத்து வேறுபாடு உண்டு, ஆனால் மாநில நலனை வீட்டுக்கொடுக்காதவர் ஜெயலலிதா, தற்போது விவசாயிகளை வஞ்சிக்கும் மோடியின் கையில் முதல்வர் பழனிசாமி இருக்கிறார். மோடியின் கொள்கையால் இந்தியா பிளவுபடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.