சென்னை: திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம், கடல் வளங்களைப் பயன்படுத்த, மத்திய அரசால், நீலப் பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதா என்றும், வரைவுப் பொருளாதாரக் கொள்கையில், பொதுமக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதா என்றும், நாட்டின் மொத்த உற்பத்தி பெருக்கத்தில், நீலப் பொருளாதாரத்தின் பங்களிப்பு எந்த அளவாக இருக்கும் என்றும் மக்களவையில் டி.ஆர்.பாலு விரிவான கேள்வி எழுப்பினார்.
பின்னர், டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியதாவது: இந்திய கடல் பகுதிகளில் நீடித்த வளர்ச்சியை உறுதிபடுத்தும் வகையில் கடல் வாழ் உயிரினங்கள், சுற்றுலா மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய வரைவு நீலப் பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என்றும், மீன் பிடித்தல், மீன் பதனிடுதல், கடல் சார்ந்த வர்த்தகம், மீன்பிடி துறைமுகங்களை கட்டமைத்தல், கடலுக்கடியில் கச்சா எண்ணெய் ஆராய்ச்சி மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான பரிந்துரைகளை இந்த பொருளாதாரக் கொள்கை உறுதி செய்யும் என்றும், இந்தியாவின் மொத்த உற்பத்தி பெருக்கத்தில் நீலப் பொருளாதாரத்தின் பங்களிப்பு சுமார் 4 விழுக்காடு அளவிற்கு இருக்கும் என்றும், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் விரிவான பதிலை அளித்துள்ளார்.